வெள்ளைஅங்கிஅணிந்த பாபா - கண் சிமிட்டும் நேரம் வந்து போனார்... அப்போது அவர் கேட்டது: ‘அது...அவ்வளவுதானா?' -அனுராதா ரமணன்.

  ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அற்புதங்கள்  


ஸ்ரீ சத்யசாயி சங்கீர்த்தனம்

அனுராதா ரமணன்

ஓம் ஸ்ரீ சாயிராம்



        ஸ்ரீ சத்ய சாயியின் பிரியத்துக்குப் பாத்திரமான, அன்புள்ளங்களுக்கு நமஸ்காரம்.

    அனுராதா ரமணன்' என்கிற நாவலாசிரியையை, எழுத்தாளரை உங்களுக்குத்தெரிந்திருக்கலாம்.ஆனால், அவளுள்சின்னதும் பெரிசுமாய் துளிர்க்கும் ஆன்மீகப் பூக்களைப் பற்றி...அவை, இது வரையில் சந்தைக்கு வராதபூக்கள்...கடவுளின்விஸ்தாரமானதோட்டத்தில் அரும்பி, மொட்டும், பூவுமாய்-அவரது காலடியிலேயே சமர்ப்பிக்கப்பட்டவை... ஒரு விதத்தில், சின்னக்குழந்தைகள்மண்சொப்பு வைத்து, பாவனையாய் சோறுபொங்கிப் பரிமாறுவது போல... அழகான - அந்தரங்கமான- அந்தராத்மாவின் ராக சஞ்சாரங்கள்...

    1996-ஆம் வருடம் ஒரு நாள்... புட்டபர்த்தியில் பூத்து, புவனமெங்கும் தன்அருளை இதமாக அளித்துக் கொண்டிருக்கும் 'பகவான்ஸ்ரீ சத்ய சாயி' பற்றி ஓர் அந்தாதி எழுத ஆரம்பித்தாள் அனு.

    விளையாட்டாகத்தான். குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவது போலத்தான்... பத்தொன்பதாவது பாடல் வரையில் படு வேகமாய் சமைத்தவள் - அடுத்து வந்த சிற்சில சோதனைகளில் இதை மறந்தே போனாள்....அப்புறம் 1998-ல் ஒரு நாள், கனவில் வெள்ளைஅங்கிஅணிந்த பாபா - கண் சிமிட்டும் நேரம் வந்து போனார்... அப்போது அவர் கேட்டது: 

    அது...அவ்வளவுதானா?'

    'எது...'

    கனிந்த புன்னகை... பார்வையில் பரிவு... அடுத்த விநாடி கனவு களைந்தது... அவள் திடுக்கிட்டாள். எழுந்து அமர்ந்தாள்... மறுநாள் எதேச்சையாய், அவள் கவிதை என்கிற பெயரில் கிறுக்கி வைத்திருக்கும் நோட்டுப்புத்தகத்தைப் பிரித்தபோது... முற்றுப் பெறாதவரிகளின்புன்னகை... பிடரியில் அடித்தாற்போலப் புரிந்தது... 'எது... எவ்வளவுதானா' - என்பது. மறுபடியும் தொடங்கினாள்... மனசுக்குள் தானாக ஊறி வந்தவார்த்தைகளை

- சத்ய சாயி எனும் பட்டு நூலில் கோர்த்தாள்...

    இதை என்னசெய்யப் போகிறாய்...?
 
    இது என்ன இலக்கணசுத்தமான கவிதையா...? இல்லையே...!

    படித்த பண்டிதர்கள்முன் இதை வைக்கிற அளவுக்கு நீ தைரியசாலியாகி
விட்டாயா?

    இப்படி அவளுள் எழுந்த கேள்விகளை எல்லாம் தட்டித் தட்டி உட்கார வைத்தவள்- தனக்குத்தானேசமாதானமாய் சொல்லிக் கொண்டது இதுதான்:

    இது ஒரு மழலையின் மகிழ்ச்சி வெளிப்பாடு. இது நாள் வரையில் தான் பட்டதுயரங்கனைஎல்லாம் வெறும் காற்றாய், கனவாய் மாற்றிய பகவானுக்கு, வார்த்தைகள் தடுமாற-விழிகள்குளமாக -அர்ச்சித்தநன்றிமலர்க்குவியல்... 

    இதை முடித்ததும் - வெளியிடுகிற பாக்யம் யாருக்கென்பதையும் அந்த பகவானே தீர்மானிக்கட்டும் என்றிருந்தவளுக்கு...குடும்ப நாவல்' பற்றிப் பேச திரு. ஜி.அசோகன் வர... அன்றைக்கு வியாழக்கிழமை... அந்தாதியின் நூறாவது பாடலை அவளது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்த நேரம்... பொன்மாலைப் பொழுது...

    ‘... பெறுவீர்புண்ணியங்கள் புட்டபர்த்தி நெஞ்சில் கொண்டு!"

    ஆம்...எங்கேயிருந்தோ - எதற்காகவோ வந்த திரு.ஜி.அசோகன்அவர்கள் இந்தப் புண்ணியத்தைக்கட்டிக்கொண்டார்...

    பாபாவின் பக்தர்களுக்கும், 'குடும்ப நாவல்' வாசகர்களுக்கும் ஒரு சிறிய
விண்ணப்பம்:

    இதில் நாவலாசிரியையைத் தேடாதீர்கள். 

    சொற் குற்றம், பொருட் குற்றம் பார்க்காதீர்கள். பகவானைமட்டும் தரிசியுங்கள்...

    நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்! 

    ஓம் ஸ்ரீ சாயிராம்!

அன்புடன்,
அனுராதா ரமணன்.



விநாயகர் துதி


அன்பே, அன்பின் வடிவே, ஆருயிர்க்கெலாம் 
கண்போன்ற கணபதியே, கண நாயகனே
பண்பை, படிப்பை, பன் திருவைப் பெருக்கு 
உன் சேவடி தொழுத பேர்க்கு...



1.      அழைத்தேன், அழைத்தவுடன் எழுந்தோடி வந்த திருவே,
        குழைந்தேன் நின் கார்முகில் கேசம் கண்டு,
        மழைக்கே குடை பிடித்த மாதவனே, இக்கலியில்
        செழிக்கும் செஞ்சுடரே சத்யசாயியெனும் முழு நிலவே!

2.     நிலவே, நிலவின் கதிரே, கதிரின் குளிரே,
        மலரும் பூப்போன்ற முன் நெற்றி காந்தியழகே!
        பலரும் போற்றும் பரிவான பகவான் நீயே!
        தளரும் நெஞ்சுக்கு சாந்தி தரும் வாசனே!

3.     வாசனே! வந்தித்து வருவோரைக் காக்கும் ஈசனே!
        எனையாண்டு என்னுள் வாழும், நேசனே!
        உன் பிறை நெற்றி கண்ட பேருன் தாசனே!
        உன் தாளினைப் போற்றி நின்றேன்.

4.     நின்றேன்; கிடந்தேன், வெறுந்தரையில் புரண்டேன்;
        சென்றேன்; பலவிடத்தும் திரிந்தேன்;
        ஒரு பயனுமிலை குன்றை இரு புருவத்தில் கவிழ்த்த காருண்யா,
        ஒன்றே என் தெய்வம்; அது நீயெனக் கண்டேன்!

5.     கண்டேன்; கண்டதும் கண்ணீர் சொரிந்தேன்
        உண்டேன், உண்டேன் உன் விழியமுதை...
        கொண்டேன்மனதில் கொண்டேன் ஓர் உறுதி, அண்டேன்,
        அண்டேன் இனி அற்பர்தம் வாசல்!

6.     வாசலோ, எனைப் பரிவுடன் வரவேற்கும் உன் விழி
        வாசலோ, என் வாசல் தேடி வந்த திரு தீபமோ
        பேசவோ, இதை நான் பேசவும் தகுமோ.... 
        கேசவா, நடமாடும் நாயகா நீயே துணை!

7.      துணையே வழித் துணையென வந்த உனையே
        இணையேது மில்லாக் கமலக் கண்ணழகா!
        வினையகற்றும் வித்தகாவிமலாஉனை நான் 
        நினையாத நாளெல்லாம் பிறவா நாளே!

8.     நாளும்கோளும்நவக்கிரகமும் என் செயும்?
        கோலத் திரு நாசியில் ஓடும் சுவாசக் காற்றில்
        ஆலாய் பறக்குமென் வல்வினையும்கொடிய நோயும்
        நீலக்கடல் துயின்ற பெருமானே சாயிநாதா!

9.     நாதனும் நீயேஎனைப் பெற்ற தாயும் நீயே,
        வேதனும் நீயேஎன தருமைத் தந்தையும் நீயே,
        காதலில் பெற்றெடுத்த பிள்ளையும் நீயே,
        சோதரன்சினேகிதன்நீயன்றி வேறுயாரே!

10.    யாரும் அறியார் என் குறையை தூமணியே!
        சீறும் கடலிடை வலம்புரி போல் திகழ் செவியோய்!
        பாரோர் புகழும் பரமகுரு நீயறிவாய்!
        வாரும்... வந்தருளைத் தாரும்... தயாநிதியே!

11.    நிதியொன்று உண்டு நீல மணிவண்ணனே,
        கதியென்று வந்த பேரை காக்கும் சற்குருவே,
        விதிகளைத் தோற்கடிக்கும் வாசகம் சாயிநாதா மதிதனில் வைப்போம்;
        மரணம் வரை மறப்பதில்லை!

12.    இல்லை மரணபயம்; இனியில்லை கடுந்துயரம்
        கல்லை கற்கண்டாய் மாற்றுகின்ற மாயவன்தான்
        வில்லை வளைத்தது போல் திரு செவியோன் அருகிருக்க
        எல்லையில்லாப் பேருவகை தேடி வரும் நம்மிடமே!

13.    இடமும் வலமும் சங்கு சகடக் குழையாட
        விடமும் அமுதென உண்டவன் மைத்துனன்,
        திடமாய் நம்மிடை உலவுகின்றான் ஓருருவில்
        படமாய் இருப்பினும், பார்க்கிறான், கேட்கிறான்!
 
14.    கேட்டுப் பெறவில்லை நான், நீயளித்த வரமிது.
        வாட்டும் துயரத்திலும், என் மடி விழுந்த கனியிது.
        ஏட்டுக் கவிதையிலை, என் உயிர் உணர்ந்த கவியிது.
        பூட்டிலை, கதவிலை, என் திறந்த உள்ளம் அறிந்து கொள்!

15.    கொண்டு வந்த பேரெல்லாம் நின்று தவிக்கின்றார்.
        கண்டு கொண்டாய் எனை ஈசனே என் சொல,
        செண்டுபோல் இதழ் திறந்து பேசுமணி விளக்கே
        உண்டுண்டு நீயுண்டு! உளமாரச் சொல்வேன்!

16.    சொல்லும் சொல் எல்லாம் எனை உய்விக்கும் கை விளக்கு,
        புல்லும் புரிந்து கொள்ளும், உன் திருஅதரப் பேரமுது
        கல்லும் கனிந்துருகும் உன் கருணைமிகு வார்த்தைகளால்
        சொல்லும் செயலும் உன் சித்தமின்றி வேறறியேன்!

17.    அறிவதற்கு வேறில்லை, எல்லாம்நீ யான பின்னே!
        தெரிவதற்கு ஏதுமில்லை, தெய்வம் ஒன்றான பின்னே!
        புரிவதற்கு ஒன்றுமில்லை, பிரபஞ்சமே நீதான் என்பேன்!
        நெறி தவறா நெஞ்சமே சாயிநாதன் வாழும் கோவில்!

18.    கோவில் கலசமவன் கோலத் திருமுகமே!
        நாவில் வசிக்கின்றாள் ஞான சரஸ்வதியே!
        பூவில் வண்டு உறைவது போலிருப்பாள்
        தாய்க்குத் தாயாவாள்கண்டிலையோ சிறுமனமே!

19.    மனமே மாலிருக்குஞ் சோலையெனக் கூறிடுவேன்
        தினமே நவநவமாய்ப் பூப்பூக்கும் நந்தவனம்
        வனமே யானாலும் வானரங்கள் சேட்டையில்லை
        கணமும் இமையாது காக்கின்றான் கர்த்தனவன்!

20.    அவனுள் இருப்பதுதான் அண்டசடாட்சரமே!
        சுவரில் சித்திரமாய் சுந்தரரின் திருவுருவம்
        எவருள் இருந்தாலும் புண்ணியப் பிறவியவன்
        உவமை வேறில்லை; உலகமே அவனுள் அடக்கம்!

21.     அடக்கத் தெரியவில்லை, ஆனந்த களிப்பதனை
        சிடுக்கை யறுத்து சிக்கல் தீர்க்கும் பரமனவன்,
        நடக்கும் பாதையெல்லாம் நெருஞ்சியும் மலராகும்,
        தடுக்க முடியாது அவனருள்தான் பெரு வெள்ளம்! 

22.   வெள்ளப் பெருக்கதனில் நீந்தி விளையாடும்
        பிள்ளைச் சிறுமனது, பேசுகின்ற தெய்வமவன்
        சொல்லால் வடிக்க இயலாத கருணை மழை
        உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்துள்ளான்!

23.    உள்ளான் என்பதற்கு சாட்சியேதும் தேவையில்லை!
        நல்லார் மனதில் எல்லாம் நாயகனாய் நிறைந்துள்ளான்.
        கல்லார், கற்றார் பேதமில்லை யவன் சந்நிதியில்,
        உள்ளார், ஏழை ஏதுமில்லை அவன் வரையில்!

24.   வரைந்திட இயலாத வர்ணப்பூ மேனியவன்
        உரைத்திட முடியாது சுவர்ண மய ரூபமதை
        வரையறுக்க முடியாது அவன் தரும் வரங்களதை
        கரையிட முடியாது கார்முகில் போல் கருணைமழை!

25.   மழைக்கும் குடையாகும் மாயனவன் அபயகரம்
        உழைக்கும் மாந்தர்க்கெல்லாம் உதவுகின்ற தங்கக் கரம்
        செழிக்கும் பட்டமரம் அவன் விரல் நுனி பட்டால்,
        தழைக்கும் அன்பு வெள்ளம் அன்பனவன் திருக்கரத்தால்!

26.   ஆல் போல் செழித்து அருகு போல் வேரோடி
        நாலாபுறமும் அவன் அன்பிலே ஆடும் பக்தர்
        கோலா கலம்தான் என்றும் புட்டபர்த்தி விழாக்கோலம்
        பாலாய், தேனாய், இனித்திருக்கும் எம் நெஞ்சினிலே!

27.   
நெஞ்சக் கமலமதே தூயனவன் வாசஸ்தலம்
        அஞ்சிடத் தேவையில்லை, அழையுங்கள் அவன் வருவான்
        தஞ்சமடைந்து விட்டால் தாங்கிடுவான் தாய்போல
        கஞ்ச மலரடியை சிக் கெனப் பிடித்திடுவீர்!

28.  இடுவீர் அன்னம், பசியென்று வந்த பேர்க்கு,
        நடுவீர் மரக்கன்று வெயிலில் வாடுவோர்க்கு
        நெடும் பயணம் தேவையில்லை நேசனவன் சந்நிதிக்கு
        கடுகியே வந்திடுவான், உள்ளத்தில் உறைந்திடுவான்!

29.   வான் போலப் பரந்தமனம் பூப்போன்ற மென்மையது
        தேன் போலப் பேசிடுவான், திகட்டாது ஆனாலும்
        ஊன் உறக்கம் தேவையில்லை சுந்தரரின் முகம் பார்த்தால்,
        'நான்' எனும் அகந்தை போம் நாதனவன் உள்ளிருந்தால்!

30.  இருந்தால் அவன் பேரைச் சொல்லி இருக்க வேண்டும்!
        நடந்தால் அவனிருக்கும் இடம் தேடிப் போக வேண்டும்!
        கிடந்தால் அவன் பாதம் படுமிடத்தில் கிடக்க வேண்டும்!
        முடிந்தால் - என் ஆயுள் முடியும்வரை இதுவே வேண்டும்!

31.   வேண்டும் என்பார்க்கு வேடிக்கைகள் காட்டிடுவான்
        மீண்டும் மீண்டும் அவர் மனம் வெளுக்கச் செய்திடுவான்
        கண்டும் காணாதுப் போவது போல் போனாலும் - 
        உண்டு அவனருள் உனக்குண்டு எப்பொழுதும்!

32.  எப்பொழுதும் எக்கணமும் சாயிநாதன் பெயர் சொன்னால்
        தப்பெழுத முடியாது பிரும்மனவன் எழுத்தாணி
        முப்பொழுதும் முக்கனியும் விருந்து வகை நிறைந்திருக்கும்
        அப்பொழுதே திருமகள்தான் வாசல் தேடி வந்திடுவாள்!

33.  வாள் கொண்டு அறுத்தாலும், வெஞ்சிறையில் போட்டாலும்
        வாள் எல்லாம் பூமாலை, சிறையெல்லாம் அவன் கோவில்,
        கோள்நவமும் அவனிடத்தில் சொன்னபடிக் கேட்டிருக்கும்
        மாளாத துயரமெல்லாம் சொப்பனமாய் மாறிவிடும்!

34.   மாறிவிடும் உன் வாழ்க்கை, சத்ய சாயி பெயர் ஒன்றை கூறியழை,
        உன் வம்சம் வந்துதித்த குலக் கொழுந்தை
        நூறில் ஒன்று குறையாமல் வாழ்ந்திடுவோன் அக்குழந்தை
        நேரில் பார்த்திடுவாய், நீயும் அந்த விந்தையதை!

 35.   விந்தைகளை வேதனவன் செய்கின்ற காரணமேன்?
        சிந்தைதனைத் தெளிவாக்கி, ஜீவன் முக்தர் ஆக்குதற்கு
        முந்தைப் பிறவிகளின் வல்வினைகள் தீர்ப்பதற்கே,
        மந்தைக் கூட்டமதை வழிநடத்தும் மேய்ப்பனவன்!

36.   மேய்ப்பனவன் கையிலுள்ள மந்திரக் கோல் தத்துவம்தான்
        ஏற்பதற்கு ஏதுமில்லை அன்புஎனும் மந்திரம்தான்
        ஓய்வதற்குள், கை கால்கள் ஒடுங்குதற்கும் முன்னாலே
        வேய்ந்திடுவீர் ஓர் கூரை - அன்பு எனும் ஓலை கொண்டு.

37.   ஓலை கொண்டு கூற்றுவன்தான் வருமுன்னர் நினைத்திடுவீர்!
        காலை, பகல் இரவெல்லாம் காத்திருப்பான் அன்பருக்கு
        வேலை வேறு இல்லையில்லை, சத்தியமாய் அவனுக்கு,
        சோலைவன நிழல் போலக் காத்திருப்பான் தொண்டருக்கு!

38.  தொண்டருக்கும் தொண்டனவன் தூய மனம் ஒன்றிருந்தால்
        அன்பருக்கும் அன்பனவன், ஆண்டையெனக் கண்டு கொண்டால்
        நண்பனுக்கும் நண்பனவன் நேச மனம் கொண்டிருந்தால்,
        உண்டவர்க்குப் புரியும் அந்த அருளமுதம் என்னவென்று!

39.   வென்றிடுவீர் பல தேர்வு, சாயிநாதன் துணை கொண்டு
        சென்றிடுவீர் உலகெங்கும் சத்குருவின் அருள் கொண்டு
        நின்றிடுவீர் சன்மார்க்கப் பாதையிலே அவனோடு 
        ஈன்றிடுவீர் செல்வம் பதினாறும் வரப் பெற்று!

40.  பெற்றால்தான் பிள்ளை என்பதில்லை அவன் சொல்வான்
        கற்றால்தான் வித்தை என்பதில்லை கண்டு கொள்வாய்
        மற்றோர் உதவி தேவையில்லை மனம் பழுக்க
        உற்றவனாய் அவனிருக்க ஏது குறை சிறுமனமே?

41.   சிறுமனதுள் வீற்றிருப்பான் சிம்மாசனம்போட்டு 
        நறுமலரின் மணம் போல நீக்கமற நிறைந்திருப்பான் 
        தருவதற்கு ஏதுமில்லை, சாயிநாதா என்றால் போதும் 
        மறுப்பேதும் கூறாமல் வேண்டும் வரம் தந்திடுவான்!

42.   வான் வெளியில் தகதகக்கும் ஆதவன் போல் அவன் அங்கி 
        ஞான ஒளி தேடும் பக்தர் நெஞ்சத்திலே சுடர் விளக்கு 
        காணக் கண்கூசும்கண்டார்க்கு மெய் சிலிர்க்கும்
        மோனத் திருப்பார்க்கு முழுத்துயரம் தீர்த்துடுவான்!

43.   தீர்த்திடுவான் பக்தரது வாதப் பிணியத்தனையும் 
        சேர்ப்பான் நல்லோர்கள் கூடுகின்ற சபைதனிலே 
        கேட்பான் செவி கொடுத்துமக்களதும் பெருங்குறையை 
        மீட்பான் அவன் பாதம் சரணமெனப் புகுந்தாரை!

 44.  புகுந்தாரை வாழ வைக்கும் செங்கமலப் பாதமது 
        நகைத்தாரை நாண வைக்கும் நாதனவன் பாதமது 
        உகந்தாரை உத்தமராய் ஆக்கி வைக்கும் பாதமது 
        தகுந்தாரைத் தக்கபடி ஏற்றி வைக்கும் பாதமது..!

 45.  பாதமதைப் பற்றி பாவங்களை நாம் சொன்னால் 
        நாதனவன் புன்னகையால் கழுவிடுவான் நம் நெஞ்சை 
        வேதனவன் நம்மிடம்தான் கேட்பதெல்லாம் மிகக் கொஞ்சம் 
        பேதமேதும் பார்க்காத கள்ளமற்ற மனமதுதான்!

46.   தான் என்ற அகந்தையின்றிதன்னலம்தான் பாராது 
        ஏன் என்று கேளாமல் எதிர்நோக்கி ஓடிவரும் 
        மானிடர்க்கு அவன் காட்டும் பாதையெல்லாம் பாசமழை 
        தேன்போலப் பெய்தாலும் திகட்டாது அவர் வாழ்க்கை!

 47.  வாழ்க்கை முழுவதுமே வேதனைதான்
        சோதனைதான் பாழடைந்த வீடதனில் குடியிருக்க யார் வருவார்! 
        ஊழ்வினையால் உன்னிதயம் பாழடைந்த வீடென்றால் 
        மூழ்குதற்கு முன்னாலே சாயிநாதன் பேர் சொல்லு!

48.  சொல்லுதற்கு முன்னாலே சித்தத்தை தெளிவாக்கு 
        பொல்லாச் சிறுமனதைப் பொருத்தி இருத்தி விடு. 
        நல்லதையே நினைத்திருந்தால் சித்தமது தெளிவாகும். 
        வெல்லுதற்கு வேறுவழி ஏதுமில்லை கூறிடுவேன்!

49.   கூறிடுவேன் கோடி முறை, கொண்டவர்கள் கொள்க 
        பாரிலொரு பகவானாய் வந்ததொரு பெருமான்தான் 
        வேரிடையே பழுத்துள்ள ஜாதிப் பலாப் போலிருப்பான் 
        நேரிடையே காண்பதற்கு நேச மனம் வேண்டுமடி!

50.   மடியில் தவழ்வதற்குப் பாலகனாய் அவன் வருவான் 
        அடியோடும் பிள்ளையில்லாக் கவலைதனைத் தீர்த்திடுவான் 
        செடியில் பூப்பூத்து, காய்த்து, கனிவதுபோல்
        நொடியில் உன் வாழ்க்கை பூரிக்கச் செய்திடுவான்!

51.    இடுவான் இல்லையென ஏங்கி நிற்கும் பக்தருக்கு 
        நெடுவான் கொள்ளாது அவன் கருணை சொல்லுதற்கு 
        சுடுவான் நெஞ்சத்துள் மறைந்துள்ள கர்வமதை 
        நெடுமால் அவன் பாதம் போற்றித் துதிப்போமே!

52.  மேலும் ஒன்றுரைப்பேன் நாதனவன் சேவடியில் 
        வேலும் மயிலுமுண்டு கணபதியின் கருணையுண்டு 
        சூலம் கையில் கொண்ட துர்க்கையவள் காப்புமுண்டு 
        நீல கண்டனவன் சிவஞான போதமுண்டு!

53.   உண்டோ, அவனருள்தான் உனக்குண்டு என்றாலே 
        கண்டக் கழலையில்லை, காமாலை நோயுமில்லை 
        மண்டைக் குடைச்சலில்லை, மனப் பிரமைதான் ஏதுமில்லை. 
        உண்டி வெறுத்தலில்லை, உன்மத்த மேதுமில்லை!

54.   ஏதுமில்லை கடன் தொல்லை கடவுளவன் மனம் வைத்தால் 
        சேதமில்லை உன் வாழ்வு, சிறப்பாக அமைந்திடுமே 
        வேதமில்லை என்பாரும் நாதனுண்டு என்பாரே 
        சோதனைகள் தீர்த்து வைக்க பிரசாந்தி வாசனுண்டு!

55.   உண்டும் உறங்கியும் பண்டு தொட்ட காலம் முதல் 
        கண்ட சுகமென்ன, கண்டவர்கள் விண்டிடுவீர். 
        விண்டுரைக்க இயலாத உள்ளச் சுமைகள்தான் 
        தெண்டனிட்டால் தீராதோ, தெளிவாய் ஓர் முடிவெடுப்பீர்!

56.   எடுப்பீர் ஓர் சபதம், இந்த உயிர் அவன் சொந்தம் 
        கொடுப்பீர் அன்புள்ளம் அண்டிவரும் அன்பர்க்கெல்லாம் 
        தடுப்பீர் மதிகெட்டு, பாழ் கிணற்றில் விழுவோரை 
        முடிப்பீர் உம் வாழ்வை சாயிநாதன் சந்நிதியில்!

57.   சந்நிதியில் சரணமென வந்த பேரைக் காண்பதற்கு 
        தன்னிகரே இல்லாத தயாநிதி நடந்து வந்தால் 
        கண்ணீர் நதி பெருகி கங்கையென ஓடிவரும்
        மண்ணின் மைந்தரெல்லாம் மனமுருகும் விந்தையென்ன?

58.  என்னவிதம் எடுத்துரைப்பேன் அவன் பெருமை ஏராளம் 
        சின்னக் குழந்தையர்க்கு சிங்காரத் தோழனவன்
        தன்னை யறிந்தவர்க்கோ தாசனாய் கை கொடுப்பான் 
        உண்ண உண்ணத் தெவிட்டாதே உத்தமனின் அருளமுதம்!

59.   அருளமுதம் வேண்டி, அனுதினமும் வருவோர்க்கெல்லாம் 
        அருகிலே சென்று, அவர் குறையைச் செவிமடுத்து 
        சிறகிலே தன் குஞ்சைக் காத்து நிற்கும் பறவைபோல் 
        உறவிலே தாய்போல, உத்தமன்தான் காத்திருப்பான்!

60.   இருப்பதோ ஓரிடத்தில் தரிசனம் தருவதோ பலவிடத்தில் 
        வருத்தும் சுமை சுமக்கத் தோள் கொடுப்பான் ஓரிடத்தில் 
        உறுத்தும் கண்ணீரைத் துடைத்திடுவான் ஓரிடத்தில் 
        கருத்துச் சிதறாமல் இசை நுகர்வான் ஓரிடத்தில்!

61.    ஓரிடத்தில் நில்லாது பரந்திருக்கும் தென்றலவன்
        வேறிடத்தில் தேடாதீர் உள்ளத்துள் உள்ளானவன்
        பாரிடத்தில் இவன்போல பகவான் வேறு இல்லையடி 
        யாரிடத்தும் புலம்ப வேண்டாம்; கையேந்தி வாழ வேண்டாம்.

62.   வேண்டாம் என்றாலும் பரிந்தூட்டும் தாய் போலவன் 
        வேண்டி தவசிருந்தால் அருகிருந்து காப்பானவன் 
        தோண்டாது சுரக்கும் சுனையது போலவன் கருணை 
        ஆண்டான் அவனிருக்க வேண்டாம் வேறு துணை!

63.   துணையென்று நின்பாதம், சிக்கெனப் பிடித்தால் 
        இணையற்ற வாழ்வுண்டு, மனமயக்கம் தேவையில்லை
        வினைகள் அகன்றுவிடும், வேதனைகள் தீர்ந்துவிடும் 
        உனைப் போன்ற உத்தமன்தான் உலகத்தில் வேறுளரோ?

64.   உளரோ - இலரோ யானறியேன் பரம்பொருளே! 
        தளராமனம் தருவாய் சாயிநாதா என்றனுக்கு 
        வளரா தினித் துயரம், வரும் முன்னே காத்திடுவாய் 
        பலரால் போற்றப்படும் பரந்தாமா கண் பாராய்!

65.   ஆய்குலப் பெண்களுக்கு அருள் தந்த கண்ணன் நீ 
        வேய்ங்குழல் உன் கானம், உண்டோர் அறிந்திடுவோய் 
        சேய்குரல் கேட்டுத் துள்ளி வரும் தாய்ப் பசு நீ 
        மேய்ப்பன் நீயிருக்க ஏது குறை எந்தனுக்கு!

66.   எந்தனுக்கு என்றே ஏதுமில்லை சாயிநாதா! 
        சொந்தமெல்லாம் நீயே, மலரடியில் சரண் புகுந்தேன் 
        பந்தமில்லா வாழ்வெனினும் பாரெல்லாம் என் சொந்தம் 
        இந்தமனம் நீ தந்தாய், விந்தையை என் சொல்வேன்?

 67.  சொல்வேன் உன் நாமம், உயிர் மூச்சு உள்ளவரை 
        வெல்வேன் வெந்துயரம் வந்து நிற்கும் போதெல்லாம்
        உள்ளே எனக்குள்ளே உன்னுருவம் உள்ளவரை 
        செல்வேன் புகழுச்சி - செருக்கேதும் இல்லாமல்.

68.   இல்லாக் கொடுமையினால் அல்லல்கள் பட்டிங்கு
        செல்லாத இடமெல்லாம் சென்று களைத்திட்டு
        கல்லாத மக்களை கை கட்டிக் கும்பிட்டும்
        பொல்லாத் துயரெதெற்கு புருஷோத்தமன் இருக்க!

69.   இருக்கின்றான் என்பதற்கு ஆதாரம் தேவையுண்டோ
        சிரிக்கின்றான் அவனும்தான் சாட்சி தேவையென்றிட்டால்
        விரிக்கின்றான் பூப்பாதை புண்பட்ட கால்களுக்கு
        உரைக்கின்றான் உபதேசம், உன் மனமே சாந்தி பெற!

70.   சாந்தி பெற பிரசாந்தி வாசனவன் சொல்வதெல்லாம்
        ஏந்து கை விளக்கு அஞ்ஞான இருள் போக்க
        ஏந்து ஓர் விளக்கு ஏழைகள் மருள் போக்க 
        ஏந்து அகல்விளக்கு எந்தனருள் பெற்றிடத்தான்.

71.    பெற்றிடத்தான் வேறு பேறுண்டோ இவ்வுலகில் 
        கற்றதெல்லாம் நில்லாது கடவுளவன் சந்நிதியில் 
        மற்றவர்கள் அறியாமல் வேதனைகள் தீர்த்திடுவான் 
        பெற்றவர்கள்கூட இவனுக்கு அப்பால்தான்!

72.   அப்பால்தான் ஆயிரம்பேர் உனைச் சுற்றியிருந்தாலும் 
        செப்பாலடித்த காசு பலனுண்டோ அவராலே? 
        தப்பாமல் உன் பிள்ளை உனைப்போல வரும்போது 
        அப்பா என்றழுதாலும் ஏனென்று பாரானே!

73.   பாராமல் போனாலும் கவலையில்லை அறிந்து கொள்வீர் 
        சோராமல் உமக்காக ஓர் தகப்பன் ஓர் பிள்ளை 
        மாறாத பாசத்துடன் ஒரு முகமாய் இருக்கின்றான். 
        நேராகப் பிரசாந்தி நிலையம் சென்று வணங்கிடுவீர்!

74.   வணங்கிடுவீர்! வணங்கிடுவீர்! வாசமலர் பாதமதை
        இணங்கிடுவீர் அவன் சொற்கள் ஒவ்வொன்றும் கற்கண்டு 
        அணுகிடுவீர் அவனருகில் ஆட்கொள்வான் மெள்ள மெள்ள, 
        உறங்கிடுவீர் நிம்மதியாய் அவன் மடியில் ஓர் சேயாய்!

75.   சேயோன் அவன் பாதம் பன்னீரால் நீராட்டி 
        தூயமிகு பட்டால் துல்லியமாய் துடைத்திட்டு 
        மாயப் பிறப்பறுக்க வாசமலர் பல கொண்டு 
        ஓயாமல் அர்ச்சித்தால் ஊழ்வினைகள் ஓடிடுமே!

76.   ஓடிடுமே பேய்கள், பிரும்ம ராட்சதர்களும்தான் 
        கூடிடுமே கோடிசூர்யப் பிரகாசம்தான் உன் முகத்தில் 
        நாடிடுமே நல்லோர்கள் சேர்க்கையும் தானுனக்கு, 
        ஆடிடுமே அந்தராத்மா ஆனந்தக் களிகொண்டு

77.    கொண்டாடும் பக்தர்தம் வீட்டிலொரு குழந்தையவன்
         கொண்டாடும் சிறுமியர்க்கோ பாசமிகு தோழனவன்
         உண்டாம் பெரும் செல்வர், ஊர் முழுக்க என்றாலும்
         பாண்டவர்க்கு கண்ணன்போல் பரமனவன் சிரித்திருப்பான்.

78.   சிரித்திருப்பான் எந்நாளும் சீற்றமில்லை அவனிடத்தில்
        பொறுத்திருப்பான் நம்கோபம் ஏராளம் தானெனினும்
        வருத்தப் படுவானவன் வஞ்சர்கள் நெஞ்சம் கண்டு
        திருத்த முயற்சிப்பான், திருந்தாவிடில் விடமாட்டான்.

79.   விடமாட்டான் உன்னை வீணாகப் போவதற்கு 
        திடமான மனமிருந்தால் திருப்பாதம் பிடித்திடலாம். 
        தொடமாட்டான் பாவத்தில் சேர்ந்த பொருள் என்றறிந்தால்
        நடமாடும் சித்தனவன், சீர் மேவும் செல்வனவன்.

80.  அவனைத் தொழுதோர்க்கு வறுமையில்லை பிணியில்லை
        அவனைத் தொழுதோர்க்கு வாட்டும் துயர் ஏதுமில்லை
        அவனைத் தொழுதோர்க்குப் பகையுமில்லை பதைப்புமில்லை.
        அவனைத் தொழுதோர்க்கு எமபயம் சிறிதுமில்லை.

81.   சிறிதுமில்லை கையில் ஒரு பொருளும் என்றாலும் 
        வறுமைக் கொடுமையிலே வாதனைகள் பட்டாலும் 
        சிறுமைநிலை யெண்ணி அஞ்சாதீர் தவிக்காதீர் 
        பெருமையுடன் உம்மிதயம் அவன் தோளில் வைத்திடுவீர்!

82.  இடுவீர் உங்கள் இதய மலர் அவன் பாதம்
        விடுவீர் கவலைகளை எல்லாம் அவன் பொறுப்பில் 
        நிமிர்வீர் நன்றாக இனியேதும் வருத்தமில்லை
        நடப்பீர் அவன்காட்டும் பாதையிலே நேராக!

83.   ராகங்கள் அத்தனையும் அவன் குரலில் தஞ்சம் புகும் 
        தேகங்கள் பலவுண்டு தேசு உயிர் ஒன்றேபோல் 
        யோகங்கள் பார்க்க சோதிடரைத் தேடாதீர்!
        யாகங்கள் தேவையில்லை அவன் பேரைச் சொல்வீரே!

84.  ரோகம் பலவுண்டு நாறுகின்ற தேகமதில்
        தாகம் பலவுண்டு நானுரைத்தால் சகிக்காது
        மோகம் தலைக்கேறி குருநாதன் பெயர் மறந்து 
        சோகம் சுமக்காமல் சீக்கிரமாய் வாருங்கள்!

85.  வாருங்கள் ஒன்றாக வாசமலர் பாதம் தொழ
        சேருங்கள் பேதமின்றி சற்குருவின் சந்நிதியில்
        கூறுங்கள் உங்கள் சோகங்களை அவனிடத்தில் 
        பாருங்கள் பின்னாலே பாபாவின் லீலைகளை!

86.  களைந்திடுங்கள் நெஞ்சிலுள்ள தானென்ற கர்வமதை
        நிலைத்திருங்கள் ஒரு முகமாய் பேரானந்த ஜோதியினில்
        விலையேதும் இல்லாத ஞானவுரு உள்ளிருக்க 
        சிலைபோல அமருங்கள் சித்தியது வேறில்லை!

87.   வேறில்லை வினைகள் தீர, விழிப்புடனே கேளுங்கள்
        நிகரில்லை அவனுக்கு நிஜமாகச் சொல்லுகிறேன்.
        தேரில்லை என்றாலும் தெய்வமென ஒன்றுண்டு. 
        யாரில்லை என்றாலும் நானுண்டு உனக்கென்பான்

88.  உனக்கென்பான் உள்ளதெல்லாம், அவனடியில் சரணமெனில்
        தனக்கெனவே ஏதுமில்லா தயாநிதி அவன் தானே 
        மனக்கவலை இனியெதற்கு மாதவத்தான் இருக்கையிலே 
        சுணக்கமேன் மானிடனே சுந்தரன் தாள் இறுகப்பிடி!

89.   பிடிக்குள் அகப்படுவான் பாலகன்போல் அவனும்தான்
        நொடிக்குள் உன்மனத் துயரங்களைப் போக்கிடுவான்
        கொடிக்குள் பூப்போல ஒளிந்தே இருந்தாலும்
        மடிக்குள் பறித்து வைத்த மலர்போல மணத்திடுவான்!

90.  வான் போல அவன் கருணை வற்றாத ஜீவமழை! 
        தேன்போல அவன் சொற்கள் தித்திக்கும் அமுதமது 
        ஊன்உறக்கம் ஏதுமின்றி அவன் வாசல் தேடிவரின் 
        ஏன்என்று கேளாமல் எதிர்நோக்கி வருவானே!

91.    வானே பொய்த்தாலும் அவன் வார்த்தை தவறாது!
        வீணே திரியாதே - வெறும் வாழ்க்கை வாழாதே!
        நானே எல்லாமெனத் திமிர் கொண்டு திரியாதே!
        மீனேயானாலும் அவன் பரிவு அதற்குமுண்டு!

92.   உண்டென்று சொல்லிடத்தான் இத்தனை சொல் வீணாமே
        கண்ணென்று உள்ளவர்கள் காணுங்கள் அவன் முகத்தை
        மண்ணென்று உள்ளவரை மாதவனும் இருக்கின்றான்!
        என்னென்று சொல்வேன் எல்லாம் அவன் சித்தப்படி!

93.  சித்தப்படி தான்நடக்கும் நானிலத்தில் நம் வாழ்வு
        நித்தம் அவன் நாமம் நினைத்தாலே மனம் தெளியும்
        சுத்தம், அகச்சுத்தம் வேண்டுமவன் சந்நிதியில்
        கத்து, கதறியழு. கண்ணீரால் அகம் கழுவு!

94.  கழுவினால் தீராது, கர்மவினைகள் ஏராளம்!
        மழுவினால் எரித்தாலும் மாளாது மன அழுக்கு
        நழுவிடவும் முடியாது நாதனவன் பார்க்கின்றான்
        விழுந்திடுவீர் அவன் காலில் சரணமெனக் கதறிடுவீர்!

95.   கதறி அழுதிட்டால் காந்தனவன் காத்திடுவான்
        பதறிப் பரிதவித்துப் பக்கத்தில் நின்றிடுவான்!
        சிதறிப் போகாமல் சிந்தைதனை நிலை நிறுத்து
        உதறு உலகப்பற்றை உத்தமன் துணை வேண்டுமெனில்!

96.  வேண்டுமெனில் அவன் துணையும் வெட்கமென்ன சொல்லிடுவீர்
        தாண்டு பாவ சாகரத்தை பரிசுத்தன் கைபிடித்து
        மீண்டுவர இதுநாளும் நீ செய்த முயற்சிகள்தான்
        நீண்டதொரு பட்டியல்தான் விடைதெரியா விடுகதைதான்!

97.   கதைதான் என்றாலும் சாயிநாதன் சொல்லுகையில்
        எதையும் நாடாது மனவண்டு அதில் லயிக்கும்
        விதைக்குள் விருட்சம்போல் - கதைக்குள் தத்துவங்கள்
        சிதையாதிருந்து நம்மை சீர் பெறவே செய்துவிடும்!

98.  செய்து விடும் அற்புதங்கள் ஏராளம் தானெனினும்
        எய்துவிட்டான் என்னை - சிறுமதியால் கவிபுனைய
        கொய்துவிட்ட மலர் மீண்டும் கொடி புகாதென்பதுபோல்
        நெய்துவிட்டேன் பாமாலை இனியெல்லாம் அவன் செயலே!

99.  செயலேதும் வேண்டாமே சிவனே யென்றிருங்கள்
        பயனேதும் இல்லைகாண் பரந்தாமன் பதம் மறந்தால்
        வயதான முதியோரும், பாலகரும், பெண்களும்தான்
        தயவோடு இதைச் சொல்லி தயாநிதி அருள் பெறுக!

100. பெறுவீர் பலன் பலவும் பாபாவின் பெயர் சொல்லி
        பெறுவீர் ஞான மார்க்கம் நாதனவன் கரமசைவில்
        பெறுவீர் சுவர்க்க சுகம் பூதவுடல் நீங்காமல்
        பெறுவீர் புண்ணியங்கள் புட்டபர்த்தி நெஞ்சில் கொண்டு!

101.  கொண்டாடிக் கொண்டாடி சாயிநாதன் அந்தாதி
        பண்பாடி தினம் தினமும் பரவசமாய் பூசித்தால்
        கண்டோர்க்கும் கேட்டார்க்கும் இல்லை மனக்கவலை
        விண்டுரைத்தேன் என்றாலும் பிழைகள் பொறுத்தருள்வீர்!

குறிப்பு:
இந்த உள்ளடக்கத்தை தேடி கண்டுபிடித்து, வழங்கிய திரு சர்ச்சில் பாண்டியன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அன்புடன் யாழ் சுதாகர்

free Hit Counter

Comments

Popular posts from this blog

யாழ் சுதாகர் வீட்டில் சாயிபாபாவுக்கு போட்ட மாலை வளர்ந்தது!

அரை மயக்கத்தில் இருந்த நேரம் பக்கத்தில் ஆரஞ்சு நிற அங்கியுடன் சத்ய சாயி பாபாவின் தோற்றம் .. -கீதா தெய்வ சிகாமணி

மெய் சிலிர்க்க வைக்கும் பழைய பக்திப் பாடல்களுடன் சாயி பாபாவின் அருள்மொழிகள் - யாழ் சுதாகர்